ஸ்வீடன் நாட்டு இளைஞரை கரம்பிடித்த மதுரைப்பெண் – தமிழ் கலாச்சாரப்படி நடைபெற்ற காதல் திருமணம்...!

By selvarani Updated on :
ஸ்வீடன் நாட்டு இளைஞரை கரம்பிடித்த மதுரைப்பெண் – தமிழ் கலாச்சாரப்படி நடைபெற்ற காதல் திருமணம்...! Representative Image.

மதுரையைச் சேர்ந்த ஐ.டி நிறுவன பெண் ஊழியர், ஸ்வீடன் நாட்டு இளைஞரை பெற்றோர் சம்மதத்துடன் தமிழ்முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா. இவரது தந்தை திருச்செல்வன் எல்ஐடியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஸ்வீடன் நாட்டில் ஸ்டோக்ஹோம் நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் நிவேதிதா பணிபுரிந்து வந்தார். அவருடன் அதே நகரைச் சேர்ந்த எட்வர்ட் வீம் என்பவரும் பணிபுரிந்துள்ளார். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழக ஆரம்பித்தனர். அப்போது, தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பற்றி எட்வர்ட், நிவேதிதாவிடம் கேட்டுத் தெரிந்துள்ளார்.

ஸ்வீடன் நாட்டு இளைஞரை கரம்பிடித்த மதுரைப்பெண் – தமிழ் கலாச்சாரப்படி நடைபெற்ற காதல் திருமணம்...! Representative Image

இதில் தமிழ் மொழி, கலாச்சாரத்தின் மீது எட்வர்ட்டுக்கு ஏற்பட்ட ஆர்வமும், ஈர்ப்பும் நிவேதிதா மீதும் ஏற்பட்டது. இதனையடுத்து, நிவேதிதாவிடம் தனது காதலை அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர, இதற்கு பெற்றோர் ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் செய்வோம் என்பதில் பிடிவாதமாக இருக்கவே, பெற்றோர்கள் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டினர்.

இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் இவர்களது திருமணம், தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் முறைப்படி இன்று நடந்தது. தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓத மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தாய்மாமன்கள் முன்னிலையில் தாலி கட்டினார். இந்த திருமணத்திற்காக மாப்பிள்ளை எட்வர்ட் குடும்பத்தினர் 70 பேர், விமானத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பே மதுரை வந்தனர். அவர்கள், திருமணத்திற்கு முந்தைய இடைப்பட்ட நாட்களில் தமிழ் வழக்கப்படி நடக்கும் திருமணங்களை கேட்டு தெரிந்து கொண்டு, அதன்படி, மாப்பிள்ளை-மணப்பெண் நிச்சயதார்த்தம், மணப்பெண் - மணமகன் அலங்காரம், மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பு போன்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் நடத்தினர்.

ஸ்வீடனில் இருந்து வந்த மாப்பிள்ளை எட்வர்டு குடும்பத்தினர், தமிழ் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து இந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளுடன் அவர் ஆட்டம், பாட்டத்துடன் இரு வீட்டாரும் வெவ்வெறு நாட்டினரை என்பதை மறந்து மொழி, மதம், இனம், கலாச்சாரத்தை தாண்டி கொண்டாடினர். திருமணத்திற்கு பிறகு, மறு வீடு விருந்து, பங்காளி வீட்டு விருந்து தொடர்ந்து தேனிலவு சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளையும் மதுரையிலே நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்பான செய்திகள்
தற்போதைய செய்திகள்