பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடிக்கு அந்நாட்டின் 'தி கிராண்ட கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்' என்ற உயரி விருது வழங்கப்பட்டது. இந்த விருதி அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கி மோடியை கவுரவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று (ஜூலை 14) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விருந்தளித்தார்.
அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் 'தி கிராண்ட கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்' என்ற விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கி கவுரவித்தார். இந்த விருதானது இராணுவம் அல்லது சிவிலியன் கட்டளைகளில் பிரான்ஸ் அரசின் மிக உயரிய கவுரமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த விருது, தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டின் இந்த உயரிய விருதைப் பெறும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இன்று நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில், அந்நாட்டு படையினருடன், இந்தியாவின் முப்படையினரும் பங்கேற்க உள்ளனர். தேசிய தினத்தையொட்டி நடைபெறும் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியில், பிரான்ஸிடம் இருந்து இந்திய விமானப் படைக்காக வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களும் பங்கேற்கின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
பிரான்ஸ் அரசு முறை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, நாளை (ஜூலை15) பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் முகமது பின் ஜாயத் நயன் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.