![6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் - கூட்டாளிகளே தீர்த்துக்கட்டி கிணற்றில் வீசியது அம்பலம்! 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் - கூட்டாளிகளே தீர்த்துக்கட்டி கிணற்றில் வீசியது அம்பலம்!](https://www.politicalbuff.com/assets/uploads/news-sub-7531.png)
காஞ்சிபுரத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு போகிப் பண்டிகையின்போது காணாமல் போன இளைஞரை, குடி போதை ஏற்பட்ட தகராறில் கூட்டாளிகளே அடித்து கொலை செய்து கல்லை கட்டி பாழடைந்த கிணற்றில் வீசியது தற்போது அம்பலமாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் சோலை ராமசாமி தெருவில் வசித்து வந்தவர் கிரி என்கின்ற கிருபாகரன். இவர் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி போகிப் பண்டிகை நாள் முதல் காணவில்லை என அவரது சகோதரிகள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிவகாஞ்சி காவல்துறையினர் கிருபாகரன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆறு மாதங்களாக காவல்துறைக்கு எவ்விதமான துப்பும் கிடைக்காமல் இருந்தது.இந்நிலையில் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குடிபோதையில் கிருபாகரனை கொலை செய்த விஷயம் குறித்து உலறி உள்ளனர். இச்செய்தி அரசல் புரசலாக சிவகாஞ்சி காவல்துறைக்கு வந்தது. உடனடியாக களத்தில் இறங்கிய சிவகாஞ்சி காவல்துறையினர் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எட்டு பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த ஹரிஷ், ஆகாஷ், கார்த்தி, தாமோதரன், ஆகிய நான்கு இளைஞர்களும் கிருபாகரன் உடன் நட்பாக பழகி வந்ததாகவும், நண்பர்கள் அனைவரும் கடந்த போகிப் பண்டிகை அன்று மது அருந்திய நிலையில், யார் பெரியவர் என வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறிதாகவும், அப்பொழுது இளைஞர்கள் நான்கு பேரும் ஒன்று கூடி சேர்ந்து கிருபாகரனை அடித்து கொலை செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அடித்து கொலை செய்த கிருபாகரன் உடலில் கல்லை கட்டி பிள்ளையார் பாளையம் புதுப்பாளையம் தெரு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த கிணற்றில் வீசி சென்று உள்ளனர். அவ்வப்பொழுது வந்து பார்த்து உடல் மேலே வராத அளவிற்கு கண்காணிப்பு பணியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, கிருபாகரன் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி நான்கு இளைஞர்களையும் சிவகாஞ்சி காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருபாகரன் கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்ட பாழடைந்த கிணற்றில் இருந்து தண்ணீரை இரைத்து உடலை தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் முன்னிலையில் மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். குடிபோதையில் யார் பெரியவர் என்ற தகராறில் நண்பனையே அடித்துக் கொன்று கொலை செய்து உடலைத் கிணற்றில் வீசிய இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.