நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து 3 பேர் காரில் சென்னை சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் திருமங்கலம் - விருதுநகர் நான்குவழிச்சாலையில் செல்லும் போது, கள்ளிக்குடி விளக்கு பகுதியில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி பறந்து சென்றுள்ளது. அப்போது சாலையின் மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர் என்று மொத்தம் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் காரில் வந்தவர்கள் தேங்கன்குழிவிளையை சேர்ந்த சம் டேவிட்சன், மார்ட்டின், கமலநேசன் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.