நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18 ஆம் தேதி புகழ்பெற்ற கடை ஏழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி விழா அரசு விழாவாக வெகு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சி, மூலிகை செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 02 மற்றும் 03 ஆம் தேதிகளில் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 03 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இந்த விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், ஆகஸ்ட் 01, 02 மற்றும் 03 ஆகிய மூன்று நாட்களுக்கு கொல்லிமலையில் உள்ள செம்மேடு, செங்கரை மற்றும் சோளக்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த மூன்று நாட்களில் கடையை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்வது தெரிய வந்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.