
சென்னை: முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான உதவித்தொகை ஆயிரம் ரூபாய் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை தலைமைசெயலகத்தில், முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான உதவி தொகை ஆயிரம் ரூபாய் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்படுகிறது.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து காத்திருப்போருக்கு தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். பல்வேறு சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியங்களை பெறும் 30.24 லட்சம் பேருக்கு உதவித்தொகை உயர்வு பயனளிக்கும்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்படும். மகளிர் உரிமைத்தொகைக்கு சுமார் 50லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் கேட்டு காத்திருப்பு பட்டியலில் உள்ள 74லட்சம் பேரில் தகுதியானோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். உதவித்தொகை உயர்வு காரணமாக ஆண்டுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த ஒரு பயனாளியும் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார் என்றார்.