சிபிஐக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை..! - குட்கா வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளிவைப்பு

By Selvarani Updated on :
சிபிஐக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை..! - குட்கா வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளிவைப்புRepresentative Image.

குட்காவை விற்பனைக்கு அனுமதித்த குற்றச்சாட்டில் பதிவான வழக்கு விசாரணைக்கு அனுமதி மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக அனுமதி கடிதம் கிடைக்கவில்லை என சிபிஐ தெரிவித்ததால் வழக்கின் விசாரணையை 11 ஆவது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு குட்கா விற்பனை நடைபெறுவதாக எழுந்த புகாரில் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யபட்ட குட்கா விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரி கிடைத்தது.

இதில், அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், அரசு அதிகாரிகள் பழனி, செந்தில்வேலவன் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்கள் இருப்பதாக அடிபட்டது. இதுதொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

பின்னர் வழக்கு பதிவு செய்த சிபிஐ, கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது. 

சிபிஐக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை..! - குட்கா வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளிவைப்புRepresentative Image

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்ட மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு 2022 ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது.இதனையடுத்து 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் குறித்த விபரங்களையும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு எதிரான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு  சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கின் அனுமதி மற்றும் குற்றப்பத்திரிகை தயாராகி விட்டாத என சிபிஐ காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார். சிபிஐ தரப்பில், இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

தொடர்பான செய்திகள்