கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் இருந்து நெசலோனிக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இந்த இரு ரயில்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் நடந்துள்ளது.
ரயில்கள் நேருக்கு நேர் மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகளில் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதில் 3 பெட்டிகள் வெடித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும், பல பயணிகள் ரயில்களின் இடிபாடுகளிலிருந்து வெளியே குதித்துத் தப்பியுள்ளனர். இந்த விபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசகமாகின. இதையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர், ஏராளமான பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் 250 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று வரை 38 பேர் பலியான நிலையில் இன்று பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்களும் எதிரெதிர் திசையில் வந்ததே இந்த பயங்கர விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.