ராணிப்பேட்டை அருகே மது போதையில் அரசுப் பள்ளிக்கூடத்தில் புகுந்து புத்தகங்களை எரித்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டையை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பூட்டை மர்ம நபர் ஒருவர் உடைத்துள்ளார்.
பள்ளியில் உள்ளே புகுந்து வகுப்பறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார். பள்ளியில் உள்ள மின்சாரம் கணக்கெடுக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை அவர் சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவன் மது போதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் இதே பகுதியில் அடிக்கடி மதுபோதையில் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது, பொதுமக்களுக்கு இடையூறு தருவது போன்ற செயல்களில் தொடர்ந்து செயல்பட்டுவந்தது போலீசாரின் தொடர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குடிபோதையில் அடிக்கடி பிரச்சினை செய்வதால், அவரது மனைவி கணவரை பிரிந்து தன் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து, மாணவர்களின் படிப்பில் விளையாடிய சமூக விரோதியை போலீசார் கைது செய்தனர்.