எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - ஆர்.எஸ்.பாரதியின் மனு தள்ளுபடி

By selvarani Updated on :
எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - ஆர்.எஸ்.பாரதியின் மனு தள்ளுபடிRepresentative Image.

கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்ட சென்னை நீதிமன்றம், ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. அதன்படி அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், எட்பபாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை என்றும், லஞ்ச ஒழிப்பு துறை அளிக்கும் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை மட்டுமே அவருக்கு உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி, புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு, அதை மீண்டும் ஆராய தேவையில்லை எனவும் வாதிட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் புகார் வந்தால் அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கடந்த 2018ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை என்றும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், 2018ல் செய்த ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில், மூடிமுத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டு, ஆர்.எஸ் பாரதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்பான செய்திகள்