கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புதிய பெட்டிகளுடன் கூடிய சிறப்பு மலை ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நீலகிரியில் கோடை சீசனையொட்டி சுற்றுப்பயணிகள் வருகை நாள்தோறும் இருந்துவருகிறது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாக்ளில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. இதுவரை பழைய பெட்டிகள் இணைத்து சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், புதிய மலை ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டது. இந்தப் பெட்டிகள் ரயிலுடன் இணைப்பட்டு, புதிய பெட்டிகளுடன் கூடிய மலை ரயில் சேவை, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.