மதுராந்தகம் பஜார் வீதியில் பிரபல தனியார் செல்போன் கடையின் பூட்டை உடைத்து பத்து லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிச்சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் தனியாருக்கு சொந்தமான டார்லிங் என்ற செல்போன் சென்டர் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் விற்பனை செய்து விட்டு கடையை ஊழியர்கள் மூடிவிட்டுச் சென்றனர். இன்று காலையில் ஊழியர்கள் வந்து பார்த்த பொழுது கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்படை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது பூட்டை உடைப்பதற்காக அங்கு இரும்பு ராடுர்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தப்போது, சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான விலை உயர்ந்த 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, மதுராந்தகம் காவல்துறைக்கு கடையின் உரிமையாளர் தகவல் கொடுத்தார். இதன்பேரில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விலையுயர்ந்த செல்போன்களை எடுத்துச்சென்ற செல்போன் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.