பாலியல் புகார் குழு செயல்படுவதை உறுதி செய்க..! - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By selvarani Updated on :
பாலியல் புகார் குழு செயல்படுவதை உறுதி செய்க..! - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுRepresentative Image.

ராணுவம், கடற்படை, விமானப் படைகளிலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ்உள்ள புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள விமானப்படை கல்லூரியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த பயிற்சி வகுப்புக்கு வந்த விமானப் படை பெண் அதிகாரியை, சக அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விமானப் படையின் ராணுவ நீதிமன்றம், விசாரணையை துவங்கியது.

இந்த விசாரணையில் திருப்தியளிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விமானப் படைச் சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவரை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி, விமானப் படை கல்லூரி கமாண்டண்ட் தாக்கல் செய்த மனுவை ஏற்ற கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை ஒப்படைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து கோவை அனைத்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, விமான படைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை எனவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையில்லை எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டு, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், விமானப் படை பெண் ஒருவர், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக போராட தைரியம் இல்லாவிட்டால், வேறு யாருக்கு இருக்கும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, ராணுவம், கடற்படை, விமானப் படைகளிலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் உள் புகார் குழுகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்பான செய்திகள்