திருச்சியில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்ணை கட்டையால் அடித்து தரதரவென இழுத்துச்சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி வா.உ.சி சாலையை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி சீதாலட்சுமி திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். 53 வயதான சீதாலட்சுமி கடந்த மார்ச் 12 ஆம் தேதி மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் இருக்கும் பள்ளி மைதானத்தில் நடைபயிற்சிக்காக சென்றுள்ளார். வண்டியை நிறுத்தி சென்ற அவரை பின்னாடி இருந்த ஒருவர் கட்டையால் அடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் அவரின் மொபைல் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றுவிட்டார்.
அந்த காட்சிகள் சம்பவம் நடந்ததற்கு எதிரில் இருக்கும் வளாகத்தில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை ஒருவர் படம்பிடித்து போலீசாருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் வந்த போலீசார் அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வாகனத்தை திருடியவர் பற்றி விசாரிக்கையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பலமனேரி பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்றும் தெரிய வந்தது. 32 வயதான இவர் திருச்சி பஜாரில் தங்கியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவரை கைது செய்ய போலீசார் மேற்கொண்ட முயற்சியில் இருந்து தப்பிக்க முயன்ற செந்தில் விபத்துக்குள்ளானார். சிகிச்சைக்கு பின்னர் அவரை சிறையில் அடைப்பதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.