முன்னாள் அமைச்சர் செல்வகணபதி அரசு நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குவது தொடர்பாக அதிமுக சார்பில் தலைமைச் செயலாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளருமான செல்வகணபதி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தலைமை தாங்கி அரசு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். அது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,
முன்னாள் அமைச்சர் செல்வகணபதி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். தற்போது அவருடைய தண்டனை தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தவிர வழக்கு நிலுவையிலே தான் இருக்கிறது. எந்தவிதமான அரசு பதவிகளோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதியாகவும் இல்லாத ஒருவர் எப்படி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறார்?. மக்களின் வரிவணத்தில் நடத்தப்படும் அரசு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவதற்கு என்று வரைமுறை இருக்கிறது.
அதில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவர் எந்த விதமான அரசு பொறுப்புகளிலும் இல்லாத நபர் எப்படி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறார். இதற்கு அந்த மாவட்ட ஆட்சியர் எப்படி அனுமதி கொடுக்கிறார்.. எனவே இது தொடர்பாக புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரை அழைத்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிமுக சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை பேசினார்.