சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு அமைச்சர் நேருவின் சகோதரரான ராமாஜம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் இதனை மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கே.என்.நேருவின் மற்ற சகோதரர் ஆன ரவிச்சந்திரன் என்பவர். கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
அந்த குழுவில் சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை நடந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டன, பல அமைப்புகள் விசாரித்துவிட்டன என நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்தார். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது ரவிசந்திரன் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் திருப்தி அளிப்பதாகவும், நியாயம் கிடைக்கும் என நம்புகிறதாகவும் மனுதாரர் ரவிசந்திரன் தரப்பில் தெரிவித்தனர்.
அரசு தரப்பில் இதுவரை 1,040 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும், சாட்சிகள் குறிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு அதன் விசாரணையை முடித்து விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.