
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முறையற்ற பயிற்சியும், ஆலோசனைகளும் இல்லாததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் சபரிமுத்து என்கிற ஆகாஷ் நடுக்குத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் பயிற்சியாளராக இருந்து வருகிறது. 25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான பாடிபில்டிங் போட்டியில் வெற்றி பெற்றவர்.
அதைத்தொடர்ந்து மாநில அளவிலான போட்டியிலும் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே ஆகாஷை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆகாஷ்க்கு இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல் செயல் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து போலீஸ் வழக்கு பதிவு விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
விசாரணையில், ஆகாஷ் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து வந்ததோடு, கட்டுமஸ்தான உடலுக்காக ஸ்டீராய்டு ஊசி செலுத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதிகளவு ஸ்டீராய்டு ஊசியே ஆகாஷின் உள்ளுறுப்புகள் செயலிழந்ததற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆணழகன் போட்டிக்காக ஆசைப்பட்டு அதிக அளவு ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதால் ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.