காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தான், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ-வுமான திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவையடுத்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் மறைந்த திருமகன் ஈவேரா அவர்களின் தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் வேட்பாளராக நின்று போட்டியிட்டார். கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதில், சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். பின்னர், மார்ச் 10 ஆம் தேதி சட்டப்பேரவையில் உறுப்பினராக பதவி பிரமாணம் செய்தார். அதையடுத்து, வருகின்ற மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விரைவில் நலம் பெற வேண்டி அரசியல் தலைவர்களும், அவரது ஆதரவாளர்களும் தங்கள் பிராத்தனைகளை தெரிவித்துவருகின்றனர்.