புதுச்சேரி உப்பளம் அவ்வை நகரைச் சேர்ந்தவர் ஜீவகன். இவர் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததால் ஜீவகன் தனது பள்ளி நண்பர்கள் 6 பேருடன் புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரை கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய ஜீவகன் நீரில் முழ்கியுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர்கள் சத்தம்போட்டதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் ஜீவகனை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், ஜீவகன் பரிதாப உயிரிழந்தார். பின்னர், சடலமாக மீட்கப்பட்ட மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிட்சை முடிந்த சந்தோசத்தை நண்பர்களுடன் கொண்டாடிய மாணவனுக்கு ஏற்பட்ட இந்த விபத்து சம்பவம் சக மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.