அத்தியாவசிய மருந்துகளின் விலையை, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயம் செய்கிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மருந்துகளின் விலையை திருத்தி வருகிறது.
இந்த நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்த மத்திய அரசு அத்தியாவசிய மருந்துகளின் விலையை மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் 12.12 சதவீதம் உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி, வலி நிவாரணிகள், இதய நோய் மருந்துகள், தொற்று நோய் தடுப்பு மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகப்படுத்தப்பட உள்ளது.