தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிமுக - பாஜக இடையே கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன. சமீபத்தில் பாஜக நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் அதிமுகவிற்கு தாவியதால் பாஜகவினர் கடுப்பில் உள்ளனர். அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் நேரடியாக அதிமுகவை விமர்சனம் செய்தனர்.
'அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது' என்று செல்லூர் ராஜுவும் பாஜகவை பதிலுக்கு விமர்சனம் செய்தார். இதனால், இவர்களின் கூட்டணியும் இப்பவோ அப்பவோ என்று உள்ளது. இந்த நிலையில் தான் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய ஒரு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, “தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்.
அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என்று பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு பாஜக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வரும் செய்தி தவறானது” என விளக்கம் அளித்துள்ளார்.